![prasanth rasa magan123 - Cinemakaaramcoffee](https://cinemakaaramcoffee.com/wp-content/uploads/2023/08/prasanth-rasa-magan123.jpg)
history news
சீமான் எழுதிய கதை- பிரசாந்தின் ராசாமகன் உருவான கதை
பொதுவாக மேடைகளில் சீமான் பேசும்போது தனக்கு வழிகாட்டிய ஆசான்களை மிகவும் மரியாதையாக பேசுவார். குறிப்பாக தனக்கு திரையுலக வழிகாட்டியாக விளங்கிய மணிவண்ணனை வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா என அழைப்பதை பார்த்து இருப்பீர்கள்.
மணிவண்ணன், சீமான் உறவு மிக நெருக்கமானது. சில வருடங்களாக சீமான் மேடைகளில் பேசும்போது சில விசயங்களை நம்ப முடியாத அளவில் சொல்லுவதால் அவர் மீது கதை விடுபவர் என்ற இமேஜ் உள்ளது.
உண்மையில் சீமான் மணிவண்ணன் நட்பு மிக நெருக்கமானது. இதை சீமான் சொல்லும்போது பலர் நம்புவதில்லை. இவர்களின் நெருங்கிய நட்புக்கும் மணிவண்ணனின் நம்பிக்கைக்கும் பாத்தியப்பட்டவர் சீமான் என்பதற்கு உதாரணம்தான் இந்த ராசா மகன் திரைப்படம்.
![Rasa magan 123 - Cinemakaaramcoffee](https://cinemakaaramcoffee.com/wp-content/uploads/2023/08/Rasa-magan-123.jpg)
#image_title
ஏப்ரல் 8ம் தேதி 1994ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்துக்கு ராசா மகன் திரைப்படம் திரைக்கு வந்தது. இரு நெருங்கிய குடும்பத்தின் திடீர் பிரிவுகள் தான் கதை.
பிரசாந்த், சிவரஞ்சனி இந்த இரு குடும்பத்தை சேர்ந்த காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். நன்றாக இருக்கும்போது இருவரும் ஒட்டி உறவாடுவதும் குடும்ப ரீதியான சண்டையின் போது இருவரும் பிரிந்து தவிப்பதும் உருக்கமாய் இருக்கும்.
இப்படத்தில் சிவரஞ்சனி கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாக காட்டி நடித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் வந்த அஞ்சுகஜம் காஞ்சிப்பட்டு என்ற பாடலை சீமான் அதற்கு முன்பு வந்த அமைதிப்படையில் சங்கிலிய போட்டுப்புட்டோம் என்ற வரிகள் வருமாறு எழுதியுள்ளார் அதற்கு மெட்டும் இசைஞானி அமைத்துள்ளார். பின்பு அந்த பாடல் இடம்பெறும் சூழல் இல்லாததால் அதற்கு பின்பு வந்த ராசா மகனில் அஞ்சுகெஜம் காஞ்சிப்பட்டு என்று மாற்றி எழுதி இந்த பாடல் வெளிவந்தது . பாடலும் செம ஹிட் ஆனது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற வைகாசி வெள்ளிக்கிழமை தானே என்ற பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
காத்திருந்தேன் தனியே என்ற மெலடி பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இளையராஜாவிடம் இசைக்கலைஞராக பணியாற்றிய சந்திரசேகர் என்பவர் இப்பாடலை பாடி இருந்தார்.
இப்படத்தை மணிவண்ணன் தான் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை சீமான் எழுதியது. தனது சிஷ்யர் சீமான் மீது கொண்ட நம்பிக்கையால் இந்த கதையை இயக்கி இருந்தார் மணிவண்ணன்.படமும் ஓரளவு பேசப்பட்டது. ஆரம்பத்தில் வரும் கலகலப்பு பின்பு இப்படத்தில் இருக்காது. ஓவர் சென் டிமெண்ட்டும் அழுகாச்சியும்தான் இப்படத்தின் பெரிய வெற்றியை கெடுத்தது என சொல்லலாம்.
இப்படத்தை கடைசி வரை கொண்டு சென்றது மணிவண்ணன் மற்றும் சுந்தர்ராஜனின் நடிப்பு,சிவரஞ்சனியின் கவர்ச்சி, இளையராஜாவின் பாடல்கள் என்றால் மிகையாகாது.
மேலும் இதில் ஆண்டையாக நடித்த மணிவண்ணன் மூடத்தனத்தை சாடுபவராக கலகலப்பாக நடித்திருந்தார். இவரின் வில்லத்தனமும் நகைச்சுவையும் தான் படத்தின் பெரிய ப்ளஸ் என சொல்லலாம்.